Tuesday, June 16, 2020

நீரின்றி அமையாது உலகு

நீரின் இன்றியமையாமையை விளக்க ஒரு கவிதை.

அன்பர்கள் படித்து அவதானித்து கொள்ளவும்.

அறிந்தது தான் இருந்தாலும் நாம் அலட்சியம் கொண்டதன்

விளைவு நிலத்தடி நீரானது குறைந்து போனது.


அதுவே இன்னும் சில வருடங்களில் மறைந்தும் போகலாம்.

அதற்கு முன்னே முன்னோர்கள் வெட்டி வைத்த குளங்கள்,

கண்மாய்கள், கால்வாய்கள் எல்லாம் சற்றே ஆழப்படுத்தியும்

மழை நீரை சேமித்தும் நன்னீர் கடலோடு கலந்து வீணாகாமல்

அணை அமைத்து தடுத்தும் வருங்கால சந்ததிக்கு தூய நீரை

விட்டு செல்வோம்.


------------------------------------------------------------------------------------------------------------

நீரின்றி அமையாது உலகு - வளம் கொழிக்க

நீயுமிதை மறந்தாலேது உணவு - வயல் செழிக்க

ஏரின்றி அமையாது உழவு - உளம் மகிழ நாமும்

ஏறிட்டுப் பாராமல் சென்றால் ஏதிங்கு உணர்வு...



சோறின்றி அமையாது உணவு - அது சமைக்க தினம்

நீரின்றிப் போனாலும் சுவைக்காது - உழவைத் தவிர

வேறன்றி சிறக்காது உலகு - அது புரிந்து கொண்டால்

வேரூன்றி நிற்குமே நீரும் நிலத்தடியில் அறிவோமே!



வட்டியில் வளரும் பொருளாதாரம் போலே நெகிழிப்

புட்டியில் உலவும் நீரைக் காசுக்காக விற்கும் பெட்டிக்

கடைகள் பெருகி வருகின்றன - நாளைய கேள்விக்கும்

விடைகள் இல்லாமல் போனது நிலத்தடி நீரைப் போலே!



முப்பங்கு நீரால் சூழ்ந்தது தான் உலகு - கொணர்ந்தால்

அப்பங்கும் பயன்பாடாமல் உப்பாய் போகுமே - மானிடா

எப்பங்கில் நீரை பூமியின் உள்ளே காண்பாய் -உணர்ந்தால்

அப்பங்கில் அதை நீயும் சேமித்தால் எதிர்கால விடிவுண்டு...



காடுகள் காடுகளாய் இருந்தவரை செழித்த பூமி அதையழித்து

வீடுகள் அங்கே அரங்கேறியதும் காணாமல் போனது பறவைக்

கூடுகளும் அதன் உயிரோட்டமும் அன்றி ஊருக்குள்ளே வயற்

காடுகளும் கல்லூரிகளாகிப் பயிரோட்டம் நின்றது தான் மிச்சம்...



ஆறானது கடல் கலந்தால் உப்பாகும் அதன் திடலுக்குள்

ஏறாமல் அணை கட்டித் தடுத்தால் தப்பாமல் பயனாகுமது

மீறாமல் துணைகொண்டு நலம் பயக்கத் தவறினாலது

தேறாமல் கடலை அடைந்தே தன் நிலை தான் இழக்கும்...



விழுந்தால் மழையாகவும் அருவியாகவும் அதுவே விழுந்து

எழுந்தால் ஆறாகவும் தேங்கினால் குளம் குட்டையாகவும்

பாய்ந்தால் வாய்க்காலாகவும் ஊறினால் கிணறாகவும்

காய்ந்தால் மண்ணில் மகத்துவங்கள் உண்டாகுமோ?



தோன்றிய உலகிலே செழித்திருந்த நீரெல்லாம் ஓடித்

தோய்ந்து போன இடம் தானெங்கே? பாரெல்லாம் பயன்

ஊன்றிய காலம் போய்ப் பாகல் பழம் போலே முதுமை

ஊறிய நிலையாக நிலமின்று ஆனதிங்கே - காணீரோ...



வளம் மிகுந்த பூமியிங்கே வளம்குன்றி போய் மக்கள்

உளம் புகுந்த நாகரிகத்தின் கேடாலே நலம்குன்றிப் பல

தளம் கட்டிடங்கள் பெருகியதாலும் கணக்கின்றி நீரும்

ஆழம் போய் தேடும் நிலையின்று ஆளானதன்றோ?



பயிர் செழித்தால் பயன் கண்டு பலன் கொண்டு பல்

உயிர் செழிக்கும் பூமியிலே மக்கள் மனம் வீணாகி

மயிர் மழித்த நிலை போல வழித்தால் பயனுண்டோ

வயல் அழித்த நிலமதில் வாழ்வதால் பலனுண்டோ?



தேக்கி வைக்கும் நீருக்கும் சுவையுண்டு அது போலே

பாக்கி வைக்கும் ஆசைக்கும் பலனுண்டு நெஞ்சிலதைப்

போக்கி வைத்தால் எங்கு செல்ல? நம் எண்ணமதில்

ஆக்கி வைத்தால் செழிக்கும் அங்கே நீரின் நிலை...



பஞ்சம் வந்து பாழும் மனம் கெடலாமோ? இதைக்

கொஞ்சம் நாமும் கருத்தில் கொண்டால் மாறும்

நெஞ்சம் இங்கே வீழும் நீரைச் சேர்த்து வைத்துத்

தஞ்சம் அடைந்தால் பூமியங்கே செழிக்குமன்றோ!



அருவியில் விழுகின்ற நீரானாலும் அது மண்வீழ்ந்து

மருவி ஆறாய் ஓடுமதைத் தடுத்தும் திசை திருப்பிக்

கருவியாக்கி காத்திடவும் வயல் வரைச் சேர்த்திடவும்

தருவது நம் கடனாய் கொண்டாலே நலம் கொழிக்கும்...



ஆறாதாரம் உடலிலுண்டு அது போல் மண்ணிலும் அதன்

நீராதாரம் வகை பெற்று அருவியாகி ஆறாகிக் குளமாகித் 

தேங்காமல் போனாலும் கோடையிலும் வாய்க்காலாகிப் பின்

வாங்காமல் வயல்வழியோடி நாளும் பயனடைய வேண்டும்...



நன்னீரை நாமும் சேமிக்கத் தவறினால் எதிர்காலத்தில்

கண்ணீரில் மட்டுமே கவலையுடன் உணர்வும் உப்பேரித்

தண்ணீரை சிந்துகின்ற நாளும் வரலாம் - நிகழ்காலத்தில்

பன்னீராக்கி இளைய தலைமுறை பயன்பெற வேண்டும்...



நீர் வேண்டும் போது மண்ணும் பயன் பெற நீல வானில்

கார் வந்து அழ வேண்டும் - உளம் உவகைக் கொள்ளச்

சீர் வேண்டும் பூமியில் விழுந்து ஓடியெங்கும் வாடியப்

பயிர் மீண்டு எழ வேண்டும்  - செழித்து வளமாக வேண்டும்...



தாழும் நிலை வந்த போதும் ஆற்றல் மிகுந்த மலையருவி

வீழும் நிலை நோக்கி நாளும் ஊக்கத்தோடு ஓடியலையாடி

வாழும் கலை தந்த நீரின் பெருமை கண்டு மனம் விரும்பி

சூழும் வலை வீசும் விதியை வென்று வாழ வேண்டுகிறேன்...



கற்றாரும் கருத்தில் கொள்ள வேண்டும் பல்பொருள் ஈட்டிப்

பெற்றாரும் கவனத்தில் கொள்ள வேண்டும் கடந்த காலத்தில்

முன்னோர்கள் அமைத்த நீர்வளம் எல்லாம் அழித்தால் நமக்குப்

பின்னோர்கள் அதனால் பயன் பெறுவரோ எண்ண வேண்டும்...



வயல் எங்கும் வளம் கொழித்திடவும் வீடெங்கும்

கயல் விழியாள் நலம் செழித்திடவும் நாடெங்கும்

செயல் படுத்தி உளம் மகிழ்ந்திடவும் நீரைச் சேமித்து

பயன் அடைந்து பலன் பெற்றிடவும் வேண்டுகிறேன்...



விழுந்தால் அருவி போல விழுந்து நடை பயின்று நீயும்

எழுந்தால் குருவி போல சுறுசுறுப்பாய் எழுந்து வேப்பங்

கொழுந்தாய் கசந்த வாழ்வும் கூட நறுமணம் கூட்டும் மரிக்

கொழுந்தாய் மாறி மறுமணம் பரப்பிட வேண்டுகிறேன்...



நாளைத் தொடரும் அவல நிலைக்கு இன்றே ஆளாகலாமோ?

கோளைத் தொடரும் ஆராய்ச்சியில் நீர் தேடுவதும் அவசியமோ?

வேலையென நாம் முயன்றால் பயிர்கள் செழித்துக் காய்த்திடுமே!

பாலைப் போலே நீரைக் காத்திட்டால் உயிர்கள் பல உய்த்திடுமே!









பொருள் விளக்கம்:


நெகிழிப் புட்டி - பிளாஸ்டிக் பாட்டில், நன்னீர் - நன்மை பயக்கும் நீர்,

பன்னீர் - பல்கிப் பெருகிய நீர், முப்பங்கு - மூன்று பங்கு, திடல் - எல்லை,

தேறாமல் - பயன்படாமல், ஆறாதாரம் - அனாதகம் முதலான சக்கரங்கள்,

போறாது - குறையாது, கார் - கருமேகம், வார் - பெண் அணியும் கச்சு,

மார் - மார்பகம், மருவி - உருமாறி, கருவி - பயன்படும் உத்தி, கயல் - மீன்,

தோய்ந்து - படிந்து, கொழித்திட - பெருகிட, கோளை - செவ்வாய் கிரகம்.

அறிவுரை ஏழு - அனுபவத்தின் ஏடு


செறிவுறத் தயவாய் கேளு -

தெளிவுறப் படித்து நன்றாய்க்

களிப்புறக் கருத்தில் கொண்டே

ஒளிபெற்று வாழ்ந்திட வேண்டும்...



கனிவது காயின் செயல் என்றாலும் காற்றதைத் தழுவி

இனிப்பது எதுவோ அதுவே இயற்கையின் விதியே என்று

அனுபவம் என்பது யாதெனில் பூவாய் மலரும் போதே

கனிவதும் காய்த்து உதிர்வதும் முளைப்பதன் விதியே!



விதியதும் விதித்தது போலே இயங்கினால் அதுவெல்லும்

மதியதும் மதித்ததன் விதியே என்று தயங்கினால் முயற்சிக்

கதியதும் உதித்தது போலே விளங்கினால் தனை வெல்லப்

புதியது போலே தோன்றும் அதுதான் "அனுபவம்" அன்றோ!



அன்றோ விதித்தது மனம் நினைத்தது போலே நடக்கும்

என்றோ நினைத்தால் அனுபவம் சிரித்தது - அவசரப்பட்டு

இன்றே நடக்கும் என்றால் நடந்தது யாவும் விதிப் பயன்

என்றே நினைத்து நாளைக் கடத்திட வேண்டுமன்றோ
!

---------------------------------------------------------------------------------------------------------------

அறிவுரை ஒன்று:

வாழ்விலாது இருக்கும் போது முயற்சியை விட்டுவிட வேண்டாம்

தாழ்வு வந்து இருக்கும் போது தற்பெருமை தான் பேசிட வேண்டாம்

பாழ்கடன் பற்றி இருக்கும் போது சொந்த ஊரில் இருக்க வேண்டாம்

ஆழ்துயர் தொற்றி இருந்தால் அருந்தும் கள்வெறுத்தல் வேண்டாம்




அறிவுரை இரண்டு:

வாழ்வது வந்து போது தன்னடக்கம் தான் கொள்ள வேண்டும்

தாழ்வது தழுவிய போது தளர்வடையாது இருத்தல் வேண்டும்

ஊழ்வினை சூழ்ந்த போது விதிபயன் தெரிந்து கொள்ள வேண்டும்

சூழ்வினை யாவும் வெல்ல சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும்




அறிவுரை மூன்று:

பொன்னாசைக் கொண்டு பெண்ணாசையில் பதுங்கிட வேண்டாம்

தன்னாசைக் கொண்டாலும் மண்ணாசை ஒதுக்கிடல் வேண்டும்

என்னாசை கொண்டாலும் மனதில் பேராசைக் கொள்ள வேண்டாம்

பின்னாசை கொண்டு பிதற்றாமல் முன்னாசை கொள்ள வேண்டும்




அறிவுரை நான்கு:

அன்னையம் தந்தையும் அவமதித்துக் கடந்திடல் வேண்டாம்

பின்னையும் கற்ற கல்வியைப் புறந்தள்ளி நடந்திடல் வேண்டாம்

முன்னையும் ஓர்சக்தி உண்டென உணர்ந்து கடந்திடல் வேண்டும்

தன்னையும் நம்பியவளைத் துணையென நடத்திடல் வேண்டும்




அறிவுரை ஐந்து:

வறுமை வந்து வாட்டிய போதும் மனதால் சோர்வடைய வேண்டாம்

பொறுமையைச் சோதிக்கும் போது மௌனத்தில் ஆழ்ந்திட வேண்டும்

பெருமையைக் கொடுக்கும் புகழில் பேதைமைக் கொள்ள வேண்டாம்

ஒருமையில் பன்மையைக் கண்டு நிறைவினைக் கொள்ள வேண்டும்




அறிவுரை ஆறு:

உயர்பதவி வந்த போதும் பணிந்து நடந்திடல் வேண்டும்

துயர்உதவி என்ற போதும் துணிந்து கொடுத்திடல் வேண்டும்

அயர்வுற்று இருக்கும் போது ஆழ்ந்து உறங்கிட வேண்டும்

உயர்வற்று இருக்கும் போது கலக்கம் கைவிடல் வேண்டும்




அறிவுரை ஏழு:

துன்பம் மிரட்டுகின்ற போது துணிவைத் துணையாக்கிட வேண்டும்

இன்பம் புரட்டுகின்ற போது உணர்வைத் தன்வசமாக்கல் வேண்டும்

முன்பின் அறியாதவரிடம் மூளும் கோபம் கொண்டிட வேண்டாம்

அன்பின் அடையாளத்தைக் கலைத்து விளையாடிட வேண்டாம்

மகா மகத்துவம் பொருந்திய சித்த மருத்துவம்

மருத்துவம் வளர்ந்துள்ளதா? இல்லையதன் நோய் பெருகிய

மகத்துவம் தான் மலிந்துள்ளதா? பலவண்ண மாத்திரை வடிவிலே

மருந்துகளும் பொலிந்துள்ளது - சோதனைக் கருவிகளும் தான் பெருகி

பருந்துகளைப் போலே நோயதன் காரணத்தை ஆராய்கின்றது.



ஆம் அது தான் இன்றைய தலை சிறந்த மருத்துவம் என்று நாம்

நினைக்கும் அல்லோபதி மருத்துவம். உண்மையில் அது தான்

விலை மிகுந்த மருத்துவம். சித்த மருத்துவம் மெல்ல

மெல்ல மக்கள் மறந்ததன் விளைவே நோய்களுக்கான காரண


காரியமின்றி மருத்துவர்களும் மருத்துவத்தை செய்கிறார்கள்.

பண்டைய புலவராம் வள்ளுவர் பகன்றுள்ளார் உடலிலே உண்டாகும்

நோய்க்கான காரணங்கள் மூன்று தான். அதன் வடிவம் பல என்றாலும்

அது தோன்றும் காரணம் வாதம், கபம், பித்தம் என்கின்ற மூன்று தான்.

உலக மருத்துவத்தை தனது ஒன்றரை அடிக்குள்ளே அடக்கியுள்ளார்.


”மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”


ஆம் பித்தம், கபம் மற்றும் வாதம் எனும் மூன்றும் தான் அனைத்து நோய்கள்
உருவாக மூல காரணமாய் இருப்பது.

நம் உடலில் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்ற மூன்றும் இருக்க வேண்டிய அளவில்
சீராக இருக்க வேண்டும். அப்படி அல்லாது ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது
மிகுதியானாலோ அது நோயாக நமது உடலில் தோன்றிவிடும் என்று மருத்துவ
உலக நூலோர் கூறுவதாக ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்.


ஆம் பஞ்ச பூதங்கள் ஐந்துமே மனிதனை ஆட்சி செய்கின்றது. அதிலும் மருத்துவ ரீதியாகப்

பார்த்தல் மூன்று பூதங்களே முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில் மனிதன் மண்ணிலே

ஆகாயம் பார்த்த வாழ்க்கை வாழ்கிறான். நெருப்பு, நீர் மற்றும் காற்று ஆகிய பூதங்களாகும்.

அது முறையே பித்தம், கபம் மற்றும் வாதம் எனப் படுகிறது. இந்த பூதங்கள் தன் அளவிலே

தன் நிலையினின்று மாறுபடும் போது உடலிலே நோய்களும் தோன்றுகின்றன.


அடுத்து அவர் நோய்க்கான மருத்துவம் பார்க்கும் முறையினைக் கூறுகிறார்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.



நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து
அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும்
அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.


இன்றைய மருத்துவர்கள் நோயாளியிடம் கேட்கிறார்கள் உடலுக்கு என்ன செய்கிறது?
நோயாளி சொல்லும் அறிகுறியை வைத்து மருந்துகளைப் பரிந்துரை செய்கிறார்கள்.
அதிலே குணம் தெரியவில்லையென்றால் ரத்தம் முதலானப் பலவித சோதனைகளுக்கு
உட்படுத்தியே நோய்க்கான காரணத்தை அறிய முயல்கிறார்கள். அதுவும் சில நேரங்களில்
காலவிரயமும், பணவிரயமும் ஆகின்றது.


அன்றைய சித்த மருத்துவர்கள் நாடிப் பரீட்சை செய்தே நோயையும் நோய்க்கான
காரணத்தையும் கூறி அதற்கான மருத்துவத்தை அவருடல் அமைப்புக்கு ஏற்ற
வண்ணம் மருந்தினைப் பரிந்துரை செய்தார்கள். உடல் வெளியேற்றும் கழிவுகளின்
தன்மையை வைத்தே நோயையும் அதன் காரணத்தையும் கண்டறிந்தார்கள்.

ஆகவே மருத்துவத்தின் மாற்றம் குறித்து எனது நிலைப்பாடு ஒரு கவிதை வடிவில்:

கண்டு கருத்தில் கொள்ளவும். 

உண்டுப் பார்த்து பயன் அடையவும். 
பண்டு பார்த்த மருத்துவம் தான் சிறந்ததென பறைசாற்றுங்கள். 
சித்த மருத்துவத்தை கரை ஏற்றுங்கள்.

தமிழ் மருத்துவ முன்னோர்கள் கூறியதாவது:

“மூன்றே பொருளால் ஆனது அண்டம்
மூன்றே பொருளால் ஆனது பிண்டம்
மூன்றே பொருளால் ஆனது மருந்து
மூன்றே பொருளால் ஆனது வாதமே”


என்பதால் ஞாயிறு, திங்கள், மழை ஆகிய மூன்று பொருளால் ஆனது அண்டம்.
வாதம், பித்தகம், கபம் என்னும் மூன்று பொருளால் ஆனது பிண்டம்.
இரசம், கெந்தகம், உப்பு ஆகிய மூன்று பொருள்களால் ஆனவை மருந்தும்,
வாதமும். இவ்வாறு உலகப் பொருள்களின் மூலத்தை மூன்று பொருள்களின்
தன்மையை ஒப்பிட்டுக் காணும் முறை வேறெங்கிலும் காணவியலாது.




-------------------------------------------------------------------------------------------------------------

பித்தம், கபம், வாதம் என்கின்ற மூன்றும் தன்னிலைப்

பிறழ்வதால் தோன்றும் நோய்களைக் கண்டு சொல்லும்

சித்தம் தான் உலக மருத்துவத்தின் முன்னோடியது உடல்

சிந்தும் கழிவுநிலை ஆராய்ந்து கூட நோயைக் காணும்.



நரம்பின் ரத்தம் எடுத்து ஆராயாமல் உடலில் ஓடும் நாடி

நடையைப் பார்த்தே நோயைக் காணும் அந்த நோய்க்கான

வரம்பையும் சித்தம் எனும் மருத்துவமே காரணம் தேடும்

வழியைக் கண்டு சொன்னதன்றோ இன்றைய உலகினுக்கே...



வர்மம் எனும் வகையும் கூடமருத்துவத்தின் அங்கம் தான்

வகுத்து சொன்னது உடலும் இயங்கப் பல புள்ளிகள் கொண்ட

மர்ம முடிச்சை அவிழ்த்துச் சொன்ன மருத்துவம் வேறன்றி

மகா மகத்துவம் பொருந்திய சித்த மருத்துவம் தானன்றோ!



அக்குபஞ்சர் எனும் மருத்துவத்தின் மூலமும் சித்தம் தான்

அதனுள் ஒளிந்த உடலில் அழுத்தம் கொடுக்கும் முறையும்

அக்காலத்தின் ஊசி முறை வர்மமேயன்றி வேறில்லை என

அனுபவத்தில் கண்ட உண்மையாகும் தொடு வர்மமன்றோ!



நோய் மருந்தினால் மற்றும் தீர்வதில்லை அவனவன் கர்மா

நிர்ணயம் செய்த வினைகளைப் பொறுத்தே என்றும் கண்டு

வாய் ஜாலம் செய்வோர்க்கும் நோய் வந்து தவிப்போர்க்கும்

வகுத்து சொன்ன மருத்துவமும் சித்தம் என்பது தானன்றோ!



வேரில் இருந்து இலைகள் வரை ஆராய்ந்ததன் குணமறிந்து

வேண்டும் நோய்க்கு ஏற்ப மருத்துவம் செய்யும் சித்தம் தான்

பாரில் இன்று பக்கவிளைவுகள் இல்லாத ஒரு மருத்துவமாகப்

பயன்பட்டு வருகின்றது என்றால் அதற்கு நிகர் வேறுண்டோ?



சித்தர்கள் பச்சிலையும் வேரையும் அக்குவேறு ஆணிவேராய்

சிறப்புடன் ஆராய்ந்து நமக்களித்த பொக்கிஷம் தான் நம்முயிர்

அத்தம் வரைப் பயன்பட்டுப் பல நோய்கள் தீர்க்கும் மாண்புதான்

அயலார்க்கும் அதிசயமாய் விளங்கும் சித்த மருத்துவமன்றோ!



அஷ்டவிதப் பரீட்சை மூலம் உடலின் நாடி, ஸ்பரிசத்தோடு ரூபம்

அன்றி நாக்குமதை சேர்த்து நேத்திர மல மூத்திரத்தோடு சப்தமும்

நஷ்டப் படும் விதம் கண்டுத் தெளிவுற்று நோக்கியதன் கூறு தான்

நன்றாய் நோயை ஆராயும் வழியென பறைசாற்றும் மருத்துவமே!



அல்லோபதி எனும் ஆங்கில மருத்துவம் கைவிட்ட நோயைக் கூட

அறிந்து சொன்ன நான்காயிரத்து நானுற்று நாற்பத்தி எட்டு எனும்

எல்லைக்குள்ளே அடக்கி அதற்கும் மருத்துவத்தைக் கூறி வைத்த

எண்ணிலடங்கா மூலிகையைக் கண்டு சொன்ன சித்த மருத்துவமே!



விடத்தைக் கூட நன்மையாக்கி நோய் தீர்க்கவும் அரைத்ததன்

வீரியத்தை குறைக்கும் ஹோமியோ மருத்துவம் மூலப் பொருள்

எடுக்க மூலிகை மற்றும் மலர் கொண்டே அரைத்து அணுவாக்கி

கொடுக்கத் தீரும் எந்த நோயும் சித்த மருத்துவத்தின் ஓரங்கமே!



குன்ம முதல் குஷ்டம் வரை தலை தொடங்கி பாதம் வரை பல

குறிப்புகள் எழுதி வைத்த சித்தர்கள் நமக்களித்த மருத்துவத்தில்

கன்ம வியாதிக்கும் கூடப் பரிகாரங்கள் சொல்லிக் கர்ம வினைக்

கடக்கும் வழியில் நடக்கும் முறையை சொன்ன மருத்துவமே!



தொன்மைக் காலம் முதல் தொடர்ந்து வந்த நோய்களுக்கெல்லாம்

தொன்றுதொட்டு அருங்குணத்தை கூறி யோகம்முதல் முக்திவரை

அண்மைக் காலத்துக்கும் பயனளிக்கும் விதமாகப் பகுத்து சொல்லி

அளித்த மருத்துவம் தான் தமிழுலகம் அளித்த சித்த மருத்துவமே!



தீரா நோய்களுக்கும் தீர்வுண்டு இருந்தாலும் விதிப்பயனால் அதைப்

பாராமல் போக அவனவன் கர்ம வினைக் கை விட்டு விட்டாலோ

தேறா உடலைத் தேற்றும் வழியில்லை வழியுண்டு சில ஏடுகளைக்

கூறாமல் சென்றதெல்லாம் சித்தர்கள் உலகின் நன்மைக்காகவே!



எல்லாம் வியாதிக்கும் மருந்திருந்தால் மனிதன் மரணத்தையும்

வல்லான் பொருள் குவிக்கப் பயன்படுத்துவான் என்றெண்ணியே

நல்லான் இறைவன் ஆக்கி வைத்த விதம் தான் இந்த உலகிலே

பொல்லான் விதியை வெல்லும் வகையில் அதுவும் ஒன்றே!



நோயில்லாக் காயம் இல்லை நொந்து விட்டால் நியாயமுண்டோ

காயில்லா மரமும் உண்டே உலகில் பூக்காத செடி கொடியுமுண்டு

வாயில்லா ஜீவனுக்கும் வகையான மருந்துமுண்டு வாழ்வளிக்கச்

சேயில்லா இடத்தை நிரப்பும் தயவான மருத்துவமே சிறந்ததன்றோ!



அறு சுவையின் மகத்துவமும் பகுத்துக் கண்டு சொல்லியதன்

மறு சுவையின் மாறுபாட்டால் நோய் வருமென ஒரு சுவைக்கு

ஒரு சுவை தான் வேறுபட்டால் உடலில் பித்தம், கபம், வாதம்

தரும் சுவை தான் நோயறிந்து குணம்காணும் முறையுமன்றோ!



உப்பின் சுவையே பிரதானம் எனும் ஒவ்வோர் மூலிகையிலும்

உப்புண்டு அவையே மண்ணில் இருந்து பெற்ற மகத்துவம் தான்

செப்பின் சுவை மண்டலம் தான் உண்டு வந்தால் உடல் தேறும்

சிறந்த மருந்தாய் அமைந்து உற்ற நோயும்கூட மறையுமன்றோ!



கூலிகையில் எடுத்தவுடன் வாங்காமல் நோயின் தாக்கமறிந்து

கூடுமான வரை நாடி வந்தோரையும் தேடி வந்தோரையும் பல

மூலிகைக் கொண்டு விஷக்கடியும் குணமாக்கும் விதம் தான்

முன்னோர்கள் கண்டு சொன்ன அற்புதமான சித்த மருத்துவமே!



நித்தம் நமது வாழ்வில் உண்ணும் உணவில் கூட மருத்துவத்தில்

சித்தம் தொகுத்தளித்த காய் கனிகளை உண்டு வந்தால் நாளும்

தத்தம் உடல்வாகுக்கு ஏற்றாற் போல் புரிந்து நடந்து கொண்டால்

மொத்தம் இந்த உடலில் தோன்றும் நோயிலிருந்து காக்கலாமே!



மூச்சிருக்கும் வரையில் மனிதர் முகத்தில் உற்சாகம் எனும்

வீச்சிருக்கும் வரையில் உலகில் சிறந்த மருத்துவம் என்றப்

பேச்சிருக்கும் வரையில் மண்ணில் நிலைத்து நீடித்து நின்றுப்

பூச்சிருக்கும் வரையில் பூமியில் வென்று வாழ்க! வாழியவே!









பொருள் விளக்கம்:

அத்தம் - முடிவு, அஷ்டப் பரீட்சை - நாடி,ஸ்பரிசம், ரூபம், சப்தம், நேத்திரம், மலம், சிறுநீர்,

ருசி எனும் எட்டுவகை பரீட்சைகள், தொன்மை - பண்டைய, வல்லான் - வலிமையுடையான்,

அண்மை - தற்போதைய, பொல்லான் - எமன், செப்பின் - முறையிடின், பூச்சி - பூச்சியினம்,

வீச்சிருக்கும் - வேகமிருக்கும், குன்ம நோய் - அல்சர் நோய், குஷ்ட நோய் - தோல் வியாதி,

கன்ம வியாதி - கர்மவினைப் பயனால் வரும் நோய்.

தமிழரைக் கண்டால் தமிழிலேயே உரையாடுங்கள்

தமிழ் பற்றிய சிறு ஆய்வு - நாகரீகத்தால்

தற்காலத்தில் அதிலே ஒரு தொய்வு...

கண்ணதாசனும் தான் கடைசியாக எழுதிய கவிதையிலே

இதனையே வற்புறுத்துக்கிறார்...



உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.
அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.
அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட
கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார்.

அக்கவிதையே அக்கவி எழுதிய கடைசி கவிதை.

மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -இங்கு


மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்

தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற

தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!!!


ஆம் நாமும் நம்முடைய பிள்ளைகளைத் தமிழ் பேசச் செய்து வைப்போம்...


மகாகவி பாரதியும் இதையே தான் தொகுத்துரைத்தார்:

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!



எந்த கொரியனோ அல்லது சீனனோ எடுத்த எடுப்பிலே

அடுத்த மொழியிலே உரையாடுவதில்லை,

தன் மொழியிலே தான் உரையாடுகிறார்கள்...

ஆங்கிலத்தில் பிள்ளைகள் படித்தாலும் வீட்டிலே தமிழ் பேச அனுமதியுங்கள்...

பாங்கான தமிழைப் பிழையின்றிப் பிள்ளைகள் பேசப் பேச வெகுமதி அளியுங்கள்...




"மம்மி என்றது குழந்தை -

அம்மா என்றது மாடு" - எங்கோ படித்த கவிதை


தற்கால வாழ்வியலை விளக்கும் அற்புதம்...




டாடி மாமி என்பதில் பெருமையில்லை -

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாளைப் பாருங்கள்...

ஆம்

ஆண்டாள் - தமிழையே ஆண்டாள் -

தமிழைத் தவிர வேறெதையும் சீண்டாள் -

இறைவனையே மணாளனாய் பூண்டாள்

இதைத் தவிர வேறாரையும் வேண்டாள்...



-----------------------------------------------------------------------------------------------

மழலைப் பெயர்களையும் தமிழிலே தேர்ந்தெடுங்கள்...

நிழலைப் போலே அதன் பின் தொடர்ந்து சென்றிடுங்கள்...

விழலைப் போலே வீண் வாதங்கள் தவிர்த்திடுங்கள்...

குழலைப் போலே இனிதாகப் பேசி மகிழ்ந்திடுங்கள்...



வாய்மொழிகள் பல இருந்தாலும் அதைக் கற்றாலும் - நம்

தாய்மொழி தனை மறவாது பேசி வாழ்வோம் - இனிய

கனியிருப்பக் காய் கவர்தல் முறையாமோ? - எனினும் நாம்

நுனிநாவில் தமிழ் மொழியைத் தவழச் செய்திடுவோம்!



வலிக்கின்ற போது அம்மா என்றழைப்போம் - காதல்

பொலிகின்ற போது அன்பே என்றழைப்போம் - பாசம்

அழைக்கின்ற போது அப்பா என்றழைப்போம் - பக்தி

திழைக்கின்ற போது இறைவா என்றழைப்போம்...



தமிழரைக் கண்டால் தமிழிலேயே உரையாடுங்கள் - ஆம்

அமிழ்தக் கடல் நீந்தி அதிலே கரை தேடுங்கள் - வேறிடம்

சென்றாலும் மறவாது தமிழிலே கதை பேசுங்கள் - வேறுபட்டு

நின்றாலும் உறவோடும் சிறப்போடும் நகையாடுங்கள்...



இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேலான இலக்கியங்கள் பல

திரண்ட மொழியாகும் தமிழ் - ஆயினும் தற்காலம் நாவிலே

பிறண்ட வேற்று மொழியாலே தமிழும் தொய்வடைந்து

வறண்ட நிலையிலே இருப்பதால் நீரை வார்த்திடுவோம்...



ஆதிச்ச நல்லூராம் இருபதாயிரம் ஆண்டுக்கும் பழமையென

போதித்த ஆய்வினை சற்றே நினைவு கூறுவோம் - எனவே நாம்

பாதியில் வந்த மொழிகள் சில பேசினாலும் - தாய் மொழியாம்

ஆதியில் தோன்றியதன் காரணத்தால் தமிழில் பேசிடுவோம்...



பண்பாட்டிலே மேம்பட்ட மொழியாகும் தமிழே - நம் குலப்

பெண்பாட்டிற்கும் ஏற்ற மொழியாகும் அதுவே - அறிவியல்

கற்போர்க்கும் தீர்வு பல கொடுக்கும் மொழியாகும் - செறிந்த

முற்போக்கு சிந்தனை எல்லாம் தோன்றிய நல் மொழியாகும்...



வள்ளுவன் சொல்லாதது ஏதும் இல்லை - மனிதப் பயன்பாட்டில்

கொள்ளுதற்கு அதுவன்றி ஏதும் உண்டோ - வாழ்வுமுறை திறம்பட

தெள்ளுத் தமிழ் மொழியில் சிறந்த காப்பியங்கள் பலவுண்டு - பூக்

கொள்ளும் தேன் மிகுந்த சுவை இலக்கியங்கள் தானுமுண்டு...



இன்பம் கொள்ள சிற்றிலக்கியங்கள் சிலவுண்டு - பக்திஎனும்

பண்புக்குள்ள பிரபந்தங்களும் உண்டு - காதல் ரசம் ஊரும்

கம்ப ராமாயணமும் கலிங்கத்துப் பரணியின் கடை திறப்பும்

அம்புலியாய் விளங்கும் அகநானுறும் உண்டே நம் மொழியில்...



போர் வீரனுக்கோர் இலக்கியமாம் புறநானுறும் உழவும் சிறக்க

ஏர் ஓட்டுபவனுக்குமோர் காவியமாம் ஏரெழுபது - அநீதிக்கு

சிலம்பம் எடுத்துரைத்த கண்ணகியின் மாண்பும் - விதியே என

புலம்பும் மனிதருக்கும் நாலடியார் நவின்ற நல் பாடமுண்டு...



முச்சங்கம் வைத்து வளர்ந்த தமிழ் - தற்கால நாகரீகத்தில்

முற்றிப் போய் முடங்கலாமோ? வேற்று மொழியினிலே

இச்சங்கம் போல் ஏதும் உண்டோ? மாற்று கருத்துக்குள்

இற்றுப் போய் அடங்கலாமோ? - தற்போதைய நிலையில்...



பற்று வைத்த பரத்தையின் பேரன்பால் தன் தாய்மொழிப்

பற்றை நாமும் மறக்கலாமா? வேறு வழியின்றி வாய்ப்பு

அற்றுப் போகும் நிலை வந்தாலும் தமிழ் மொழியன்றி

வேற்று மொழியில் சிறப்பு ஏதும் உண்டோ? உலக அரங்கில்...



மருத்துவத்தில் சித்தம் போல் சிறப்புமுண்டோ? அந்நிய

மருத்துவத்தில் அறியாத நோய்க்கும் மருந்துமுண்டோ?

பொறுத்துப் பார்த்தால் இத்தனை பெருமையும் வரை-

யறுத்துக் கூறும் மொழி வேறு ஏதேனும் உண்டோ?



பாரில் உண்டு பல மொழிகள் - இருந்தும் அதன்

வேரில் எங்கோ தமிழின் சுவடுண்டு - வார்க்கும்

நீரில் அதுவும் வேறுபடலாம் - எனிலும் நம்மில் பல

பேரின் பேச்சாலே நிலைபெற்று இங்கு வாழ்வதுண்டு...



எம்மொழிகள் பாரினிலே இருந்தாலும் செறிவுமிக்க நல்

மும்மொழிகள் உண்டே அதிலும் மூத்ததொரு மொழியாம்

செம்மொழியெனும் அடையாளம் பெற்ற தமிழ் மொழிபோல்

அம்மொழிகள் அமைவதுண்டோ காண் இந்த உலகினிலே...

(மும்மொழி - தமிழ், சீனம், கிரேக்கம்)



பொதிகை மலை தோன்றி புறப்பட்ட மொழியானது

அதிகம் வளர்ந்தது மதுரையெனும் நகரினிலே பின்

குடிபுகுந்தது தஞ்சைத் தரணியெனும் காவிரித் தாயின்

மடிபுகுந்து மண்பயனுற மக்கள் நலம் பெற்ற தமிழே!



திராவிட மொழிக்கெல்லாம் தாயானாள் - சங்கத்திடைத்

திரண்ட புலவர் கையில் சேயானாள் - அவர்கள் பாடித்

தாலாட்டிச் சென்றதெல்லாம் காவியமன்றோ? அதன்பின்

வாலாட்டி செல்வதெல்லாம் திராவிடத்தின் கூறு அன்றோ!



வந்தாரை வாழ வைத்தே தரணியில் வாழ்கின்றது - அது போல் 

நொந்தாரையும் தாழ வைக்காமல் சமமாகப் பாவித்துப் பாதி

வெந்தாரையும் பொறுத்துக் கொண்டே தாம் வாழக் கவிபலத்

தந்தாரையும் பெருமைப் படுத்துகின்ற அற்புதம் தான் என்னே!



கலைஞர் என்று பேர் கொண்டு வாழ்ந்தோரும் உண்டு எனில்

கவிஞர் என்று பேர் பெற்றுச் சிறந்தோரும் உண்டு பொதிகை

மலைஞாயிறு போல் உதித்து மறைந்தோரும் உண்டு இன்றும்

மண்ணில் நிலையாக வாழ்கின்றது அவர் வார்த்த செந்தமிழே!



எத்தனை பேர் வந்தாலும் தன் இளமைக் குன்றாமல் சுவை

அத்தனையும் கொடுத்த கம்பர் வள்ளுவர் இளங்கோ போல்

தமிழுக்கு மெருகூட்டிய கவிப்பெருமக்கள் உண்டோ? எனில்

அமிழ்தினும் இனிய தமிழுக்கு அவராலே பெருமையுண்டு...



என்னாலும் எள்ளளவே இயம்பிட்டேன் தமிழின் புகழைத்

தன்னாலும் தரணியிலே மென்மேலும் சிறந்திடவே நம்

எல்லோரும் முயன்றிடுவோம் தம் மனதோடு மட்டுமே

நில்லாமல் நாவாலும் சுவைத்திடுவோம் தமிழமுதை...









பொருள் விளக்கம்:

விழலை - உதாவாத நிலம், பொலிகின்ற - பிரகாசிக்கின்ற, தெள்ளு - தெளிந்த,

அம்புலி - நிலவு, இற்று - மெலிந்து, செறிவு - செழிப்பு, நொந்து - நிலை கெட்ட,

வரையறுத்து - குறிப்பிட்டு, மும்மொழி - தமிழ், சீனம், கிரேக்கம் ஆகிய மும்மொழி,

மலைஞாயிறு - மலையிடை உதிக்கின்ற சூரியன்,

கீர்த்தியுள்ள வரை மறக்குமோ?

வெகு நாட்களுக்குப் பிறகு

எண்ணங்களின் மறு தோன்றல் -

கவிதையெனும் மொழி தோன்றல் - உணர்வாய்

அவிழ்ந்த சித்திரமா ? இல்லை உள்ளமதில்

குவிந்ததன் விசித்திரமா ?

படித்தவர்கள் கூறவும்.





என் கண்ணே! என்னே!

நேர்த்தியான அழகு - இளமையின்

கீர்த்தியுள்ள வரை மறக்குமோ?

ஓ பெண்ணே! கோடிட்ட இடத்தைப்

பூர்த்தி செய்யும் எழிற் கோவிலில்

மூர்த்திசெல்லும் போது திறக்குமோ?



அன்னவளைத் தேன்கலந்து

வார்த்து செய்த வனப்பை எல்லாம்

சேர்த்து அனுப்பிய தனமல்லவா?

என்னவள் தான் மண் அளந்து

அசைகின்ற பேரழகு கண்டு இன்பத்தின்

திசைதேடத் தூண்டும் மனமல்லவா?


முன்னமவள்

தலைமுதல் பாதம் வரை நழுவியதோர்

கலையழகு சேர்ந்தமைந்த இடையல்லவா...

பின்னலவள்

மறைத்து இருக்கும் மன்மத பீடம் தனை

குறைத்துக் காட்டுகின்ற உடையல்லவா.
..





குறுநகை முகத்தின் குவியலோ - அதை

கவர்ந்து இழுக்கும் அதரப் புதையலா?

சிறுபிறை தவழும் நெற்றியோ - அதைச்

சிந்தித்தால் எனக்கென்றும் வெற்றியா?



கருநாவல் மிதக்கும் விழிகளோ - அதைக்

கொண்டாடும் கவிதை மொழிகளா?

ஒருசாயல் தாமரை வதனமோ - அதன்

ஒத்த மறுசாயல் மயக்கும் அல்லியா?



தென்னங்கள் ஊறிய பூவிதழ் உறைகின்ற

கன்னங்களா? - இடைவழியின் அடையாளச்

சின்னங்கள் போலே தேனிதழ் மறைகின்ற

எண்ணங்களா? எதை நான் சொல்வேன்...



மூங்கிலென செழித்த தோள்களோ - அதன்

முன்னாலே தோற்றிடும் வாள்களோ?

ஓங்கிய வாழைதான் தொடையோ - அதன்

ஓரத்தில் நீர் பாய்கின்ற ஓடையோ?



அடைபட்டு கொண்டிருக்கும் ஆசையும்

அணை மீறி அவளைக் கண்டு ஓர் நாள்

தடைபட்டு கொண்டிருக்கும் உணர்வைத்

தாண்டி இடை வழியின் பாதை தேடி

உடைபட்டு கொண்டு வெளிப்படும் போது

உள்ளம் தான் உவகை கொள்ளாதோ?



மாறுபட்ட உணர்வை நாடியே நாளும்

மயக்கும் மாலையிதழ் ஊறித் ததும்பும்

சாறுபட்ட நாவால் இன்பரசம் பருகச்

சிவந்திருக்கும் காமம் வெளுக்காதோ?



இரவைப் பகலாக்க இனியவளைக் கிடத்தி

இன்பத்தின் வாசல்வழி நுழைந்து ரசித்து

உறவை அகலாக்கி உணர்வைத் திரியாக்கி

உள்ளமும் நெய்யாகத் தீபமது எரியாதோ?



மைவிழியாள் அவளை அணைத்து பெண்

மைவழியும் இதழோரம் சுவைத்து உண்

மெய்வழியில் காமரசம் பெருகிக் கலந்து

மையல் கொண்டால் பாபமது பிரியாதோ?



கிண்ணமுலைக் கண்டு கிளர்ச்சி யுற்று

எண்ணமங்கே எழுந்து வளர்ச்சி பெற்று

திண்ணமுடன் நுழைந்து தளர்ச்சிகாணா

வண்ணம் கலந்தால் இன்பம் முடியாதோ?



பெண்ணமுதை பருகும் இதழும் காமக்

கிண்ணமதில் உருகும் சூடு கொண்டுக்

கண்ணிரண்டில் காணாததைக் கண்ட

பெண்தடத்தில் போதையும் வடியாதோ?



நதியது அலைகடல் கலந்தால் உப்பாகும்

விதியதில் அவள்உடல் கலந்தால் தப்பாத

மதியுமது காமத்திடல் நுழைந்து செப்பாத

கதியில் சாமத்துடன் கலந்தே விடியாதோ?



அப்பாலில் இரண்டும் மெய்யழகாய் திரண்டு

முப்பாலில் மருண்டு உணர்வெலாம் உருண்டு

முப்போதும் முனைப்புடனே முயங்கிப் புரண்டு

எப்போது முடியுமென அப்போது விரும்பாதோ?



இரண்டு மலைஏறி இடையிலே சிறு பள்ளம்

இனிதே தாண்டி இதழ் விரியும் பெரும்பள்ளம்

திரண்டு நிலைமீறி ஓடையிலே சிறு வெள்ளம்

தீண்டிப் பாய்ந்தாலே ”அந்த” மலர் அரும்பாதோ?



களவும் கற்றுமற - அது கற்றபின் அவளுடலைக்

கற்று நான் கடைத்தேறும் வழி காணத் தளறாமல்

உளவும் உற்றறிந்து - பார்த்தும் பழகிய எழிலான

உணர்வில் தனைமறந்த பொழுதும் திரும்பாதோ?



பலபாடம் படித்தும் பயனில்லை என் நினைவில்

சிலபாடம் நிற்குமதுபோல சிந்தனையில் என்றும்

மனப்பாடம் செய்து ஒப்பித்த நாட்கள் உறவானால்

தினப்பாடம் பயிலும் மனமுவந்து நெருங்காதோ?



யாரும் சொல்லாத இன்பத்தை ஒருகைப் பார்க்கப்

பாரும் கொள்ளாத பயன்பெற நானும் அவளிடைத்

தேரும் செல்லாத பாதையில் தானும் பயணித்தால்

தீரும் என்றால் தீராது என்பேன் பேராசைதானோ?



ஊறும் கேணியும் ஊற்றுள்ளவரை வற்றாததாய்

மாறும் நிலையறிந்து மயங்கிப் பெருக்கெடுத்து

ஆறுபோல் பாய்ந்துக் கலந்தின்பக்கடலாடி கரை

ஏறும்நாள் தான் நிறைவேறும் ஓராசைதானே!



கரை சேருமா ? கடலாடிய திடலிலே உப்பின்

நுரை சேருமா ? உடலாடிய மடலிலே மப்பும்

அரை சேருமா ? களவாடிய உணர்வும் உப்பும்

வரை சேருமா ? உளமோடிய தீராசைதானோ?



சொர்க்கத்தின் திறப்பா ? - மதுவா? அதுவா? எனும்

தர்க்கத்தின் பிறப்பா ? எதுவோ - விழி ஆட்கொள்ளும்

மார்க்கத்தின் உறுப்பா ? - மோதுமோ? போதுமா எனும்

தீர்க்கத்தின் பொறுப்பாய் அமைந்த இன்பத்தின் சிறப்பா?














பொருள் விளக்கம்:

கீர்த்தி - புகழ், மூர்த்தி - விக்கிரகம், குறு நகை - உதடு குறுகிய நகை,

தனம் - செல்வம் மற்றும் மார்பகம், அதரம் - உதடு, வனப்பு - அழகு,

கோடிட்ட இடம் - தலை வகிடு, வதனம் - முகம்,

மன்மத - மனம் மதம் கொள்ளும், உண்மெய் - உண்ணுகின்ற உடல்,

நழுவியதோர் கலையழகு - கண் பார்வையில் இருந்து நழுவிய,

அப்பால் - அறம் மற்றும் பொருள், முப்பால் - மூன்றாவது பாலான இன்பம்,

உளவும் - ஆராய்ந்து, அகலாக்கி - சிறு விளக்காக்கி, உவகை - மகிழ்ச்சி,

பாரும் - உலகும், திடல் - மேட்டு நிலப்பகுதி, மையல் - காதல்,

உணர்வும் உப்பும் - உணர்வு பக்குவம் அடையும், கேணி - கிணறு,

மப்பும் - மயக்கம், அரை - இடுப்பு அல்லடு இடை,

தடம் மாறிய அணிகலன்கள்

ராமாயண காலத்தில் வானரங்கள் அறியாது செய்ததைத் தான்

இன்றைய பெண்கள் அறிந்து செய்கின்றனரோ?

ஆம். தடம் மாறிய அணிகலன்கள் என்ற பெயரிலே ஒரு கவிதை.

கவிதைக்கான பின்புலம் கம்பராமாயணத்தில் இருந்தே

எடுத்து ஆளப்பட்டுள்ளது.



அதற்கான பின்புலம் பின்வருமாறு சிறிய விளக்கம்:


ராமாயணத்தில் புஷ்பக விமானத்தில் சீதாதேவியை ராவணன் நாசிக் அருகே
பஞ்சவடி என்ற இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக இலங்கைக்கு தூக்கிச்சென்றபோது
ஹம்பி ( கர்நாடகா ) , லெப்பாக்‌ஷி ( ஆந்திரா ) வழியாக தன் தலைநகரை அடைந்தான்.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் Nasik, Hampi, Lepaxi and SriLanka
இன்றைய வான்வழி ( விமான வழித்தடம் போல் ) நேர் கோட்டில் இருக்கிறது.
தங்கள் வனவாச காலத்தில் நாசிக் அருகில் இருந்த பஞ்சவடி என்ற இடத்தில்
ராமர், லெட்சுமணன், சீதை இருந்தனர். அங்கு அவர்கள் இருந்த காலத்தில் தன்னை
மணக்கச்சொன்ன சூர்ப்பனகை மூக்கை வெட்டிவிடுகிறான் லெட்சுமணன்.

அதன் காரணமாக நாசிக் ( ஹிந்தியில் நாஸி என்றால் மூக்கு ) என்று அந்த
ஊர் பெயர் வரக் காரணமானது. ரிஷ்யாமுக் பர்வதம் ( Hampi அருகில் ) ஹனுமன்
மற்றும் அவரது வானர கூட்டாளிகள் கூட்டமாக இருந்ததை பார்த்த
சீதை தனது நகைகளை கழற்றி துணியில் சுற்றி எரிகிறாள்.



இதைத்தான் கம்பர் கம்பராமாயணத்தில் அழகாக வர்ணித்திருப்பார்...

"அணியும் வகை தெரியாமல் வானரங்கள்
இடுப்பிற்கு உள்ளதை ( ஒட்டியாணம் ) கழுத்துக்கும்...
எழில் கழுத்துக்கு உரியதை இடுப்புக்கும்...
காதுக்கு அணியவேண்டியதை மூக்கிற்கும்...
மூக்கில் அணியும் மூக்குத்தியை காதுக்கும்...
மாட்டிக்கொண்டு அலைந்தன என்று"...




தடம் மாறிய அணிகலன்கள் -

தடுமாறிய கோலம் ஏனோ?

இடம் மாறியதன் காரணம்

இன்றைய நாகரீகம் தானோ ?



இடையணி மேகலை என்றொரு அணிகலன்

இருந்ததொரு காலம் - காலப் போக்கில் அது

உடையணிந்ததன் உள் ஒளிந்து உணர்விலே

உருவிய வாளைப் போலே மின்னியதாலோ?



மூக்கிலே துளையிட்டு பின் புத்தியும் தெளிவுற

மூக்குத்தி அணிந்ததொரு காலம் - அது காலப்

போக்கிலே இடம் மாறி மலையேறி கீழிறங்கிப்

போகத் தொப்புளில் பொலிவுற நன்னியதாலோ?



முன்கையில் வளையிட்டு பெண்கை வீசிவரும்

மென்னடைக்குத் தாளம் இசைக்கும் நயம் மாறி

பின்னது காலப் போக்கிலே காதணியாய் உருமாறி

பெருங்கூந்தலோடு கதைபேசப் பின்னியதாலோ?



காதணிந்த தோடுகளும் இரண்டில் ஒன்றானது

கோவைச் செவ்விதழ் நாவிலே இடம் மாறியும்

போதவிழ்ந்த கீழிதழ் மூக்கிலே மற்றொன்றும்

போனதன் காரணம் மோகமது கன்னியதாலோ?



தண்டையாடிய கால்களும் தன் நிலைமீறித்

தாளமிட்ட காலம் போய் மங்கையவள் பூக்

கொண்டையாடிய குஞ்சமும் கால வெள்ளம்

கொண்டு சென்ற இடமெங்கே? தடமெங்கே?



கூந்தலைப் பின்னிச்சென்றது ஒருகாலம் அதைக்

கலைத்து அலையாடவிட்டுத் தன் தலையாட்டும்

ஏந்திழையார் தனை மறந்த நாகரீகப் போர்வையிலே

எழில் மறைந்து போன இடமெங்கே? தடமெங்கே?



தழையாடை மெல்ல மெல்ல மாற்றம் பெற்று

தன்நிலை மாறி உதிர்ந்த காலவெள்ளப் போக்கில்

புழைமூடிய உள் காலுடையாய் உருமாறிப் பூப்

பெய்தும் வகையறியும் இடமங்கே! தடமங்கே!



முன்னழகைப் புதைத்த கலிங்கமெனும் உடை மாறி

முகப்பளக்கும் வட்டுடையாய் உருமாறி மெருகேறி

பின்னழகுக்கும் பேரழகைக் கொடுக்கும் வண்ணம்

பின்னல் கொடுத்த ஓரழகின் இடமங்கே! தடமங்கே!



பூட்டிய அழகிலே பொலிந்தது நங்கை தேகம் - வெளிக்

காட்டிய அழகெல்லாம் மலிந்ததன் மோகம் - நாகரீகம்

கூட்டிய அழகிலே தெரிந்தது மங்கை பாகம் - புதிதாய்

மாட்டிய அணிகலனால் போன இடமெங்கோ? தடமங்கே!



இடையென்பது பெண் அழகைத் தேடத் தான் தோன்றியதன்

உடையென்பது உள் அழகை மூடத் தான் தோன்றியதோ?

தடையென்பது உள்ளவரை தழுவி நிற்கும் இளமையும்

விடைதெரியாக் கேள்வியாகும் இடமெங்கோ? தடமங்கே!



வளையாடிய கைகளும் தாமரைப் பாதங்கள் பூமியில்

விளையாடிய நாட்களும் பூமறையும் பூவை தேகமதில்

துளைமூடிய அணிகலன்களும் பொலிந்த நல்லாடையும்

கிளையோடிய நாகரீகத்தில் போன இடமெங்கோ? தடமங்கே!



புடைவைத்துக் கட்டுவதால் புடவை எனும் பெயர் பெற்று

இடைமறைக்கக் கட்டியங்கு கன்னியவள் மேனியழகைக்

கடைவிரிக்க கூடாதெனும் நுட்பத்தோடு உருவாகியதோர்

உடைமாறி நீள் சல்லடம் ஆன இடமெங்கோ? தடமங்கே!



மார்கட்டு குலையாதிருக்க வாரணிந்த பெண்கள் இடைத்

தேர்தட்டு தான் மறைக்க பட்டுடை அணிந்த காலம் மெல்ல

தார்பட்டு மறைந்த சாலை மேலே மூளும் வெப்பம் தனில்

நீர்பட்டு மறைந்து போன இடமெங்கோ? தடமங்கே!













பொருள் விளக்கம்:


மேகலை - இடையில் அணிகின்ற ஓர் அணிகலன், நன்னியதால் - குறுகியதால்,

போதவிழ்ந்த - மொட்டுவிட்ட, கன்னியதால் - வெப்பமடைதல், ஏந்திழையார் - பெண்கள்,

தழையாடை - இடையில் அணிகின்ற உள்ளாடை, கலிங்கம் - மார்பில் அணிகின்ற உள்ளாடை,

வட்டுடை - பிரா, உள் காலுடை - பாண்டீஸ், பூமறையும் - பூ ஒளிந்த பெண்ணுடல்,

புடை - பக்கம், நீள் சல்லடம் - சுடிதார், வார் - கச்சு அல்லது பிரா, பட்டுடை - பாண்டீஸ்.

இயற்கைப் பேரிடர்

இயற்கைப் பேரிடர் வருவது எதனாலோ?

செயற்கைப் பேரிடம் பூமியில் கொண்டதாலோ!



பாவலர் ஆயிரம் புடைசூழ ஆண்டது

நாவலன் தீவு எனும் ஓர் கண்டம்...

ஆம்

அதுவும் மறைந்தது எதனாலோ?



முறையற்ற உறவாலே

முடிந்தது ஓர் சகாப்தம்...

கரையற்ற கடலாகக்

காணாமல் போனதொரு கண்டம்...

லெமூரியா, நாக நாடு எனும் பேர் கொண்டது

சுமேரியாவுக்கு முன் தோன்றிய கண்டம்...

அமேரிக்கா முதல் இங்கிலாந்து வரை அறிஞர்கள்

ஆராய்ந்து சொன்னது எல்லாம் பொய்யன்றோ?




பனிக்காலம் முடிந்ததன் பூமியில்

தனிக்காலம் தோன்றியதன் விளைவாக...

கனிக்காலம் தோன்றிய பூமியில் பாவையும்

தனிக்கோலம் கொண்டதன் விளைவாக...



கற்காலம் தோன்றிய பூமியில் மக்களின்

சொற்காலம் ஊன்றியதன் வினையாக...

பொற்கோலம் கொண்ட பூமி மாறித்

தற்காலம் தோன்றியதன் வினையாக...



புனிதப் படுத்திக் கொள்கிறது பூமியும்

பஞ்சபூதத்தின் பேராற்றலாலே!

வனிதைப் பேரழகை மேலும் கீழும் காண

வஞ்சிக்க வளைத்தது நீராற்றலாலே!



ஆயிரம் காரணம் இருந்தாலும் நான் மொழிவேன்

ஆயினும் வேறு சில காரணங்கள் உண்டல்லோ...


மூன்றில் ஒருபங்கு தான் நிலம் - அது

தோன்றில் மறுபங்கு எல்லாம் நீர் தான்...

மூன்றில் ஒருபங்கு தான் பெண்மை - அதுவே

தோன்றில் மறுபங்கில் விளங்கும் உண்மை தான்...





சுனாமி வருவதன் காரணம்:

கன்னியவள் கடற்கரைக்கு சென்றாளே!

பின்னலிட்ட பருவம் தாங்கி நின்றாளே!



கால் நனைத்த அலையானது அவளிடை

மேல் நனைக்க நினைந்தே விரைந்தது...


சுனாமியெனும் பேரலையாய் எமனுக்கு

பினாமியெனும் ஓரலையாய் எழுந்தது...


இடைவெளியில் எத்தனித்த விதியானது

இடைவழியைத் தான் தேடி நிறைந்தது...


கடைவிழியாள் உச்சம் தொடத்தானே

உடைவழியே உயர்ந்தெழுந்து உட்புகுந்தது...


பள்ளம் பார்த்து தானே பாயுமந்த விதியை

வெள்ளமெனும் மதியாலே உரைத்தது...


ததும்பும் இளமை கண்ட அலையானது

வெதும்பிக் கரையில் நுரையாக உமிழ்ந்தது...


கள்ளம் இல்லா மனிதரையும் சேர்த்தே

உள்ளம் இல்லா கடலும் காவு கொண்டது...




பெருமழை வருவதன் காரணம்:

குடைபிடித்துப் போகின்ற பெண்மயில்

உடைபிடிக்க நினைத்தது மழைத்துளி...


நடைபயின்று போகின்ற அன்னமவள்

இடைபயில நினைத்து மழைத்துளி...


கள்ளிடம் இல்லாச் சுவையைப் பேரின்பம்

கொள்ளிடத்தில் காண நினைத்தது மழைத்துளி...


மலையிடம் காணா எழிலைத் தேவதையவள்

முலையிடம் காணத் துடித்தது மழைத்துளி...


புல்லிடம் காணா பசுமையைப் பெண்மையின்

உள்ளிடம் காணத் துடித்தது மழைத்துளி...


ஓடையில் பாய்ந்த வெள்ளமும் மங்கையின்

ஆடையில் பாயத் துடித்தது மழைத்துளி...


தேடையில் ஏதோ ஒன்று மறைந்ததை

சாடையில் கண்டு கொண்டது மழைத்துளி...


மழைத்துளி ஆசையில் பெருக்கெடுத்து

பிழைகொண்டு உருக்கலைத்து சென்றது...




பூகம்பம் வருவதன் காரணம்:

கன்னிமயில் கால் நடந்த அழகைக்

காண ஓர் நாள் பூமியும் நினைத்தது...


அனிச்சமலர் மெல்லிய பாதம் தழுவத்

தொனித்த மண்ணதைக் காணப் பணிந்தது...


பாதமே இத்தனை மென்மையென்றே பூமிப்

பாதாளமும் அதன் ஆழம் காண துணிந்தது...


வேதமே பொய்யாய் போன உலகிலே அவள்

பாதமே மெய்யெனும் சோதனையில் பிளந்தது...


பூவிலும் சிறந்த அழகைத் தேடும் தேகம்தனை

பூமியும் ஆவலில் ஆராய நினைத்தே அளந்தது...


முன் தூக்கிய கலையின் எழில் காணப் பூமியும்

பின் தாக்கிய நிலையில் மெதுவாய் விரிந்தது...


பூவையின் மேல் லோகம் காணும் நோக்கில்

பூலோகம் விரிந்ததில் கீழ் லோகம் தெரிந்தது...


"பூ" கம்பம் என்றே பொன்மேனியைத் தழுவிடப்

பூகம்பமாய் வடிவெடுத்து ஆட்கொண்டது புரிந்தது...




புயல் வருவதன் காரணம்:

கயல்விழியாள் கடைக்கண் நோக்கிடத் தென்றல்

புயல்வடிவில் தடையின்றிப் புறப்பட்டுச் சென்றது...


ஊற்றெடுக்கும் பெண்மையின் உள்ளழகை காணக்

காற்றடித்து அண்மையில் அகப்பட்டுக் கொண்டது...


சில்லென வீசும் குளிர்வாடைக் காற்றாய் உருமாறி

கொல்லென கொல்லாமல் குறைபட்டுக் கொண்டது...


நில்லென என்றால் நில்லாமல் மேலும் மெருகேறி

புல்லென மேனி சிலிர்த்திட சிறைபட்டுக் கொண்டது...


குனிந்து இருக்கும் ஓரழகைக் காணக் காற்றும்

கனிந்துருகிக் களித்திடத் தேகத்திடைப் புகுந்தது...


அணிந்த ஆடைக்குள்ளேத் தோன்றும் வெப்பம்

தணிக்கத் தாகம் கொண்டு தென்றலாய் புகுந்தது...


சுவாசம் புகுந்து இதயம் தொட்ட காற்றும் அவளின்

சுகவாசம் காணும் ஆவலில் அவ்விடம் புகுந்தது...


இவ்விதம் எல்லா அழகைக் கண்ட தென்றலும்

அவ்விதம் இல்லா ஆசையில் புயலென மிகுந்தது...




நெருப்பு வருவதன் (எரிமலை வெடிப்பதின்) காரணம்: 


எத்தனை நாள் உள்ளிருந்த வெப்பம் ஓர் நாளில்

அத்தனை வேகத்துடன் வெளியாவதும் ஏனோ?


பஞ்சணை துயில்கொள்ளும் பேரழகு மங்கையின்

நெஞ்சினில் காதல் கொள்ள வெளியாவது தானோ...


அஞ்சனம் தீட்டிய விழியோடு உறவாட நெருப்பும்

சஞ்சலம் கொண்டு சதிராடி வெளியாவதும் ஏனோ?


புகையும் நெருப்பும் அன்னவள் கட்டழகை ஆராயும்

வகையில் விருப்பும் புதிராக வெளியாவது தானோ...


சிகை முதல் அடிவரை தழுவிட நெருப்பும் பொன்

நகை மின்னும் நிறத்தில் வெளியாவதும் ஏனோ?


பருவத்தின் அழகை மேலும் உருக்கி பேரழகாக்க

உருகும் பதத்தில் நெருப்பும் வெளியாவது தானோ...


பூமடியின் வெப்பம் பருவமடைந்து உடைபட்டு

பூவையின் நுட்பம் காண வெளியாவதும் ஏனோ?


பின்னல் பூங்கொடியாள் மின்னல் கொடியிடையாள்

கன்னித்திரை விலக்கிடவே வெளியாவது தானோ...




ஆகாயம் மாற்றம் கொள்வதன் காரணம்:

மப்பும் மந்தாரம் கொண்ட மங்கை நல்லாள் -

தப்பும் தவறும் புரியத் தலைப்பட்டது ஆகாயம்...


உப்புக் கலந்த கடல் நீரும் கொதிப்பது அவளுடல்

ஒப்பக் கலந்து ஓளீவீசிட நிலைபெற்றது ஆகாயம்...


ஏற்றம் கொண்ட பேரழகும் மெல்ல தன் நிலையில்

மாற்றம் காணப் போக உலைப்பட்டது ஆகாயம்...


நாற்றம் கொண்ட நறுமலர்ப் பெண்மை வெப்பச்

சீற்றம் கொண்டு மாற மலைப்புற்றது ஆகாயம்...


பிண்டத்தில் இவ்வளவுப் பேரழகா என்று நாளும்

அண்டத்தில் சுருங்கி விரிந்து செல்கிறது ஆகாயம்...


கண்பார்த்து தோற்றிடும் அவளெழில் கண்டு முன்னே

விண்மீனும் நெருங்கி விலகிச் செல்கிறது ஆகாயம்...


கிண்ணத்து மதுவுண்ணும் மங்கையவள் அந்தி வான்

வண்ணத்து மேனியெனச் சிவந்து விடுகிறது ஆகாயம்...


எண்ணத்துள் ஏதோ ஒன்று நுழைந்து கொள்ளும் இந்தப்

பெண்ணுக்குள் தாதோ என விழுந்து விடுகிறது ஆகாயம்...







பொருள் விளக்கம்:

மூன்றில் ஒருபங்கு தான் பெண்மை - அறம், பொருள், இன்பம் - இந்த மூன்று,

பாவலர் - கவிஞர் மற்றும் புலவர்கள், வெதும்பி - வாடி, கொள்ளிடம் - குவியும் இடம்,

அனிச்சம் - ஒரு வகை மென்மையான மலர், தொனித்த - வெளிப்பட்ட,

கயல்விழி - மீன் போன்ற விழி, துயில் - உறக்கம், அஞ்சனம் - கண்ணுக்கு இடும் மை,

சஞ்சலம் - நிம்மதி இழந்த நிலை, சிகை - தலைமுடி, மப்பும் - இருண்ட மங்கலான நிலை,

ஒப்ப - ஒன்று போல, நாற்றம் - நறுமணம், பிண்டம் - உடல், அண்டம் - அகண்ட ஆகாயம்,

தாதோ - பூந்தாது (தேன்) அல்லது விந்து.